Monday 5 August 2013

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு,தப்புகள் எல்லை மீறும் போது கடவுள் சும்மா இருக்கமாட்டார்.புயல்,வெள்ளம்,பூகம்பம்,சுனாமி,நிலநடுக்கம் வாயிலாக தண்டிப்பார்.
-நடிகர் அஜீத்குமார் (இன்றைய குமுதத்தில்)

அடப்பாவி! இயற்கை சீற்றங்களினால் உயிரிழப்பவர்கள் அத்தனை பேரும் பாவிகளா?சமீபத்தில் உத்தரகாண்ட் வெள்ளத்தில் செத்துப்போனவங்க எல்லோரும் பாவிகளா? இது போன்ற அறிவுஜீவிகளை எல்லாம் ரோல்மாடலா நெனச்சு சுத்திட்டு இருக்கிற நம்ம புள்ளைகளை என்னன்னு சொல்றது?

அஹிம்சையாவது,ஜீவகாருண்யமாவது

கடவுளுக்கு பலியிடும் ஆடு,கோழி போன்றவற்றை வெட்டும் முன்பாக வெட்டப் பயன்படுத்தும் அரிவாளைப் பார்ப்பனர்கள் முன் வைத்து தட்சணை தந்தாக வேண்டும் என்ற வழக்கம் நெல்லை மாவட்டத்தில் பார்ப்பனர்களால் அமல்படுத்தப்பட்டு வந்தது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

அஹிம்சையாவது,ஜீவகாருண்யமாவது,காசுதான் பாஸ் கடவுள்.அதில் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

கோயில்களில் தமிழ்

மக்களுக்குப் புரியாத சமஸ்கிருத ஸ்லோகங்கள் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த தமிழகக் கோயில்களில் தேவார,திருவாசகப் பாடல்களும் ஒலித்திட முதன்முதலில் வழிவகை செய்து உத்தரவிட்ட பெருமைக்குரியவர் சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ஓ.பி.ராமசாமிரெட்டியார் அவர்கள். 

ஓமந்தூரார்

காங்கிரஸ் கட்சியை சார்ந்த முதல் அமைச்சராக இருந்தாலும் தந்தைபெரியார் காட்டிய வழியில் பல சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தியதால் வர்ணாசிரமவாதிகளால் தாடிவைக்காத ஈ.வெ.ராமசாமி என்று வெறுப்புடன் அழைக்கப்பட்டவர் ஓ.பி.ராமசாமிரெட்டியார் அவர்கள்.

ஓபிஆர்

தன்னுடைய சொத்துக்கள் எல்லாம் பசியால் வாடும் ஏழைகளின் பசிப்பிணியை போக்க பயன்படட்டுமே என்ற உயரிய நோக்கில் ”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் என் மனம் வாடியதே” என்று ஜீவகாருண்யம் போதித்த வள்ளலார் நிறுவிய வடலூர் சன்மார்க்க நிறுவனத்துக்கு தன் அனைத்து சொத்துக்களையும் எழுதி வைத்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமிரெட்டியார் அவர்கள்.
கடவுளுக்கு பின்னால் இருக்கும் ஒளிவட்டம், அதை வரையும் ஓவியனால் தர முடியும் அல்லது தேருக்கு பின்னால் வரும் ஜெனரேட்டரால் மட்டுமே முடியும்.

உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே

உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே,அப்புறம் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனும்னு கேட்கறே?எவன் அர்ச்சகராக இருந்தா உனக்கென்ன?


அதானே!நீதான் ரேஷன்கடை பொருட்களை பயன்படுத்துவதில்லையே!அரிசி,பருப்பு,மண்ணெண்ணெய் விலையை ஏத்துனா உனக்கென்ன?

நீ காரிலும்,ப்ளேனிலும் பயணம் செய்யும் பணக்காரனாச்சே!அப்புறம் ஏன் பஸ் கட்டண உயர்வை பத்தி கவலைப்படறே?

நீதான் சொந்தமா சோலார் பேனல்,காற்றாலை வெச்சிருக்கியே!கரண்ட் பில் ஏறுனா உனக்கென்ன?

நம்மளை பாதிக்காத விஷயத்துக்கு நாம ஏன் கவலைப்படணும்?


ஆனால் நூறு நாள் வேலைத்திட்டம்,ஏரிவேலை இது குறித்தெல்லாம் கண்டிப்பா கவலைப்படணும்,ஏன்னா இந்த திட்டங்களால் நம்ம பண்ணையில் வேலை செய்ய ஆள் கிடைக்க மாட்டேங்கிறாங்களே.
வர்ரவன்,போறவன் எல்லாம் சிக்ஸ்,ஃபோர்னு அடிச்சிட்டு போகும் ஒரு பேட்டிங் பிட்ச் போல இந்தியா ஒரு காலத்தில் இருந்ததுன்னா அதற்கு காரணம் இந்து மதமே.இந்து மதம் இந்த நாட்டில் இருந்த மக்களிடையே ஏற்படுத்தி வைத்திருந்த ஒற்றுமையின்மையே இந்த நாடு பல துண்டுகளாக பிரிந்து கிடந்தது.அதனாலேயே ஆங்கிலேயன்,ஃப்ரெஞ்சுக்காரன்,டச்சு,அரேபியன்,ஆப்கானியன்,மங்கோலியன் என நினைத்தவனெல்லாம் போரடிக்கும் போதெல்லாம் இங்கே வந்து புகுந்து விளையாடினான்.

இப்போதிருக்கும் மதசார்பற்ற நாடு என்கிற ஒரு நிலைப்பாடு இருக்கும்வரைக்கும்தான் இந்த நாடு நிலைத்திருக்கும்,இந்துத்துவம் என் உயிர்மூச்சு போன்ற தத்துவங்கள் எல்லாம் வெற்றிபெறத் துவங்கினால் கண்டிப்பாக அதன் அடுத்த கட்டமாக வர்ணாசிரமம்,சாதி,மத மோதல்கள் எல்லாம் உச்சக்கட்டத்தை அடையத் துவங்கும்.விளைவு மக்களிடையே ஒரு பெரும் குழப்பமும்,பிரிவினைவாதமும் வலுவாக நிலைகொள்ளத்துவங்கி சரிசெய்திட முடியாத அளவுக்கு அமைதியின்மையும்,ஸ்திரமற்றத்தன்மையும் உருவாகி இந்த நாடு சிதறுண்டு போக வழிவகை செய்திடும்.

நந்தனார் வாழ்ந்த காலத்தில் தந்தைபெரியார்

உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே,அப்புறம் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனும்னு கேட்கறே?எவன் அர்ச்சகராக இருந்தா உனக்கென்ன?

யப்பா மனுதர்மவாதிகளே! எந்த ஒரு சமூக அநீதி உங்களின் முயற்சியால் இந்த மண்ணிலிருந்து ஒழிக்கப்பட்டது?

நந்தனார் வாழ்ந்த காலத்தில் தந்தைபெரியார் போன்று ஒருவர் இருந்திருந்தால் நந்தன் தீயில் இறங்கி உயிர் துறந்திருப்பானா?

ஆத்தா இட்லி,தோசை,பூரி,பொங்கல் சாப்பிடாதா?

கூழ் காய்ச்சி வீட்டில் குடிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ,ஒவ்வொரு ஆடி மாசத்திலும் பக்கத்தில் இருக்கும் கோயிலில் கூழ் ஊத்தறாங்க.கோயிலில் இருக்கும் சிமெண்ட் தொட்டி போதாமல் வாடகைக்கு பேரல் கொண்டு வந்து கூழ் ஊத்தறாங்க,அதை எடுத்துட்டு போக ஆளில்லாமல் மாட்டுக்கும்,மீதியை அடுத்த நாள் கால்வாயிலும் கொட்டுகின்ற நிலைதான் பல இடங்களில் இருக்கிறது.காலம் மாறிப் போச்சே,கூழுக்கு பதிலா வேறு ஏதாவது மக்களைக் கவரும் விதமான உணவுகளை கோயில் திருவிழாவின் பெயரால் படைக்கலாம் அல்லவா?

உண்மை

ஆதிதிராவிடர்கள் (பஞ்சமர்) பொதுத்தெருக்களிலும்,ஏனைய சாலைகளிலும் எல்லோரையும் போல சகல சுதந்திரத்துடன் நடந்து செல்லலாம் என்று முதன்முதலாக அதற்கென்றே தனித்த ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது நீதிக்கட்சி ஆட்சியில்தான் என்பதனை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

உண்மை

இதை பகுத்தறிவாளன் சொன்னால் குய்யோ,முய்யோன்னு சத்தம் வரும்,எங்க நம்பிக்கையை கேலி செய்யறீங்கன்னு கண்டனம் எழும்,ஆனால் இதை சுஜாதா அல்லவா சொல்லியிருக்காரு.


" சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, 'புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும்' - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..? "
" அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் (மற்றோரு கேள்விக்கு பதில் சொன்னபடி) மதநம்பிக்கையைக் காரணம் காட்டி
பணம் பகிர்ந்துகொள்ளும் உத்தியே! கோயிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லரை புரளும்! "
= சுஜாதாவின் கேள்வி - பதில் .
ஐய்யப்பன் கதை உண்மையோ பொய்யோ அது நடந்ததாகக் கூறப்படும் காலத்தை பாருங்கள்,மூவாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாக கூறப்படும்,ஆனால் ஐய்யப்பனுக்கு வாவர் எனும் இஸ்லாமியத் தோழன் இருப்பதாக ஒரு செய்தியும் உண்டு.

இதைப் போலவே சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளின் அண்ணன் சேரன்செங்குட்டுவன் வாழ்ந்த காலம் கி.பி முதலாம் நூற்றாண்டு,ஆனால் அவன் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் முகம்மதுவால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாத்தில் சேர்ந்தான் எனவும் அவனுடைய சமாதி ஏமன் நாட்டில் இருப்பதாகவும் ஒரு தகவல் முகநூலில் பரப்பப்படுகிறது.

உண்மைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் வரலாற்றினை திரித்து கூறுவது கூட மக்களுக்கு செய்கின்ற ஒரு மோசடியே ஆகும்.

Wednesday 30 January 2013

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாத்திகராகத்தான் பிறக்கிறது, ஆனால் அந்தக் குழந்தையை ஒரு மதத்திற்குள் திணிப்பது குழந்தையை பெற்ற பெற்றோர்கள்தான்.
மதுவுக்கு அடிமையான ஒருவன் எப்படி மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தை வேண்டா வெறுப்பாக பார்க்கிறானோ,அப்படித்தான் மதத்துக்கு அடிமையானவனும் மத அடிமைகள் மறுவாழ்வு மையத்தை (தந்தை பெரியார்) வெறுப்பாக பார்க்கிறான்.

இரண்டு பேருக்கும்,அவர்கள் திருத்தப்பட்ட பிறகே அவற்றின் அருமை,பெருமை புரியும்.அதற்கு முன்பு வரை போதை அவர்களின் மனத்தை மயக்கி வைத்து இருக்கிறது.
ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபடுவது தவறு என்று தெரிகிறது என்றால் அவள் வாழும் சமூகத்தில் அந்தப்பெண் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள் என்றுதானே அர்த்தம்?

சிந்திக்கின்ற சமூகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? அந்த பெண்ணை அழைத்து பேசவேண்டும், அந்த பெண்ணின் துயரங்களை களையும் அளவிற்கு அவள் பிழைக்க, ஜீவனம் செய்ய மாற்று வழியை அமைத்து தர முயல வேண்டும்,அதை விடுத்து எடுத்த எடுப்பிலேயே அவளை பொது இடத்தில் கல்லால் அடித்தோ கழுத்தை வெட்டியோ கொல்வது எந்த வகையில் நியாயம்? எந்த ஒரு தரப்பின் நியாயத்தையும் துயரத்தையும் யோசிக்காமல் அவருக்கு வாய்ப்பு தராமல் அவர் கதையை முடித்து வைப்பது மனித நேயத்துக்கு பொருந்தக்கூடியதா?
விலைமாதரிடம் செல்லும் ஆண்கள் எல்லோரும் கோரமான,அவலட்சணமான முகத்தை கொண்டிருப்பார்களோ?

ஏனெனில் விபச்சாரத்தில் ஈடுபட்ட அழகிகள் கைது என்றுதானே பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன, விபச்சாரத்தில் ஈடுபட்ட அழகர்கள் கைது என்று இது வரை எந்த ஒரு செய்தியும் சொல்லவில்லையே?
சமூக விடுதலையை விரும்புகிறவன் ஒருவனுக்கு,தன்னை அடக்கி வைத்திருந்த ஒரு மத அமைப்பின் மீது திடீரென பாசம் உருவாகிறதென்றால், எலிப்பொறியில் உள்ள தேங்காய் மீது எலிக்கு ஏற்படும் ஈர்ப்புக்கும் அவனுக்கு மதத்தின் மீது ஏற்படும் ஈர்ப்புக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை.

- ராஜேஷ்தீனா

கருணை


அல்லா மீது ஆணையாக கூறுகிறேன், நான் தவறு செய்யவில்லை என்று கூறியும் 17 வயதில் சிறையில் அடைக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு தலையை வெட்டி சாய்க்கப்பட்ட ஒரு சகோதரி ரிசானா விஷயத்தில் கூற்ப்படும் ஒரு விஷயம், அந்த குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை எனபது.இந்த விஷயத்தில் சவுதி மன்னர் நினைத்திருந்தால் ராஜ மன்னிப்பு வழங்கியிருக்கலாம்.வழங்கியிருப்பார் ரிசானா அமெரிக்க,ஐரோப்பிய தேசத்தவராக இருந்திருந்தால்.

இந்த சம்பவத்தை நினைக்கும் போது கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் எனும் பெண்மனியின் தியாகம்,பெருந்தன்மை,மன்னிக்கும் குணம் கண் முன்னால் வருவதை தவிர்க்க முடியவில்லை.

தொழு நோயாளிகளுக்கு சேவை செய்ய குடும்பத்துடன் ஒரிசாவில் பழங்குடியின மக்களிடையே தங்கி சேவை புரிந்து வந்தவர் பாதிரியார் ஸ்டேன்ஸ்.அவர் பாதிரியார் என்பதை விட சிறந்த சமூக சேவகர் என்பதே சரி.அவர் மதமாற்றம் செய்வதாக கூறி ஒரு கொடிய கும்பல் அவர் இருப்பிடத்தை நோக்கி வந்தது.

35 வயதான ரபீந்திர குமார் பால் எனும் தாரா சிங் தலைமையிலான குழு 1999ம் ஆண்டு சனவரி மாதம் 22ம் தேதி நள்ளிரவு பாதிரியாரும்,அவர் குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்த வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 58 வயதான ஸ்டெய்ன்ஸ், அவர் மகன்கள் 10வயது பிலிப், 7 வயது திமோத்தி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். இத்தனை பெரிய துயரையும் தாங்கிக் கொண்டு, கணவனையும் இரு குழந்தைகளையும் கொன்றவர்களை தான் மன்னிப்பதாக அறிவித்தார் கிளாடிஸ். 'மன்னிப்பில் கசப்புணர்வுகள் இல்லை. கசப்புணர்வுகள் இல்லையெனில் அங்கு நம்பிக்கை இருக்கும்' என்று கூறி மன்னிப்பின் மகத்துவத்தை செயலில் காட்டியவர் கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ். மன்னிப்பதாக இவர் வெளிப்படையாக அறிவித்திருந்த போதிலும், சட்டம் தன் பாதையில் சென்று ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தாரா சிங்கின் ஆயுள் தண்டனை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிச் செய்துள்ளது.

'மன்னிப்பில் கசப்புணர்வுகள் இல்லை. கசப்புணர்வுகள் இல்லையெனில் அங்கு நம்பிக்கை இருக்கும்' என்று கூறி மன்னிப்பின் மகத்துவத்தை செயலில் காட்டியவர் கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ்.

இந்த பெருந்தன்மை எங்கே,சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் கழித்தும் ரிசானாவின் மரணத்தை வேண்டி விரும்பி நின்ற சிறுபுத்தி எங்கே? அங்கே மனிதம் செத்து விட்டது.
 
நிறத்தை வைத்து,இனத்தை பார்த்து,சாதியை வைத்து, மதத்தை அறிந்து ஒரு மனிதரை எடை போடாமல் என்றைக்கு ஒரு மனிதரின் குண நலன்களை பார்த்து எடை போடும் குணம் இந்த மக்களிடையே பெருகி வருகிறதோ அன்றுதான் இந்த நாடு உண்மையான முன்னேற்றைத்தை நோக்கி நடைபோடுவதாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

1. பென்னி குவிக் இங்கிலாந்தில் இருக்கும் தன் சொத்துக்களை விற்று அந்த பணத்தில் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.

2.டாக்டர்.அம்பேத்கர் மேல்படிப்பு படிக்க பரோடா மன்னர் உதவி செய்தார்.

3. என் கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் நாங்கள் எல்லோரும் அண்ணா என்று அன்போடு அழைக்கும் தலித் சமுதாயத்தை சார்ந்த பாலசுந்தரம் என்பவர் நான் படிப்பதற்கு உதவி செய்தார், மேற்படிப்புக்கு சென்னைக்கு செல்ல அந்த கல்வி நிறுவனத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பினார்.

- கல்கி இதழில் டாக்டர்.ராமதாஸ்.

இந்த மூன்று செய்திகளும் உணர்த்துவது என்ன? ஏழை எளியவர்கள், வறுமையில் துன்புறுவோர் எல்லாத் தரப்பிலும் இருப்பர்.அவர்களுக்கு சாதி,மதம், நிறம்,இனம் பாராது உதவி செய்தலே மனித குணத்துக்கு சிறப்பு சேர்க்கும்.தன்னிடம் இருக்கும் பொருளினால் நலிவுற்றவர்களின் நலனை பேணிக் காத்திடுவோரே மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பர்.

அதை விடுத்து நான் ஆண்ட பரம்பரை என்று பெருமை பேசுவதும், நீ அடிமை பரம்பரை என்று இழித்தும் பழித்தும் பேசுவது மனித நேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் சிறிதும் பொருந்தாத ஈனச்செயல்.

இதைத்தான் வள்ளுவன் கூட தன்னிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈயாதவனின் பணமானது ஊருக்கு நடுவே கவர்ச்சியான பழங்களை தாங்கி நிற்கும் ஒரு விஷ மரம் போன்றது என்கிறார். அந்தக் குறள்.

நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்

நச்சு மரம் பழுத்தற்று.
 
கம்பு வாங்கி அதை மிக்ஸியில் போட்டு இரண்டாக உடைத்து அடுப்பில் அரிசிக்கு உலை வைப்பது போல உலை வைத்து தண்ணீர் கொதி வந்தவுடன் இந்த கம்பரிசியை விட வேண்டும்.இது அரிசியை விட வேக சிறிது நேரம் பிடிக்கும்.கூழ் போன்ற பதத்தில் வந்தவுடன் இறக்கினால் கம்பஞ்சோறு தயார்.

தயிர்,மோர் ஏதேனும் கலந்து எலுமிச்சை, நாரத்தை போன்ற ஊறுகாய்கள் தொட்டுக்கொள்ள சுவை சூப்பர்.

நாட்டுமீன்வகைகளான,கெளுத்தி,குரவை,வெரால்,அயிரை,உளுவை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை குழம்பு வைத்து கம்பரிசி சோறுடன் சாப்பிட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சுவை சூப்பரோ சூப்பர். நாட்டு மீன்களை தேடிச்செல்ல முடியாத இந்தக்காலத்தில் கடல் மீன்களை நாடலாம்.

கம்பு போன்ற சிறுதானியங்கள் உடலுக்கு வலுவைத்தரும், சிறு நீர்ப்பெருக்கும், இரத்தம் சுத்தமாகும், கண் பார்வைக்கு நல்லது,அசீரணக் கோளாறுகள் உள்ளவர்கள் அடிக்கடி கம்பு உள்ளிட்ட சிறு தானிய உணவுகளை சாப்பிட்டு வரலாம்.

பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மீனை நாம் அறிந்திருக்க மாட்டோம்.

இது மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் உண்மையில் இது ஆஃப்ரிக்கன் கெளுத்தி எனும் மீன்.எப்படியோ ஆசிய நாடுகளுக்குள் பரவி பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.

கடற்கரையிலிருந்து தொலைவில் இருக்கும்,கடல் மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ள மாவட்டங்களில் இது குட்டைகள் அமைத்து வளர்க்கப்படுவதாக தெரிகிறது.

இந்த மீன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு அசுரத்தனமாக வளரக்கூடியது.இந்த மீனின் வருகையால்தான் நம் உள் நாட்டு நன்னீர் மீன்களான அயிரை,உளுவை,ஆரால் போன்றவை அழிந்து வருவதாக மீன்வளத்துறையினர் கூறுகிறார்கள்.

இந்த மீனுக்கு துரித வளர்ச்சியை கொடுக்கும் பொருட்டு கோழிக்கடையில் இருந்து வீசி எறியப்படும் குடல் போன்ற கழிவுகள் இவை இருக்கும் குட்டையில் கொட்டப்படுகின்றனவாம்.தெருநாய்களைக்கூட அடித்து இந்த குட்டைகளில் போடுகின்றனராம்.

இந்த மீன் வளர்ப்பு பல வெளி நாடுகளில் மட்டுமல்ல, நம் இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த மீன் சாப்பிடுவோருக்கு பல விதமான தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு,புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாம்.

இது குறித்து பல பத்திரிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன என்றாலும் இன்னமும் இந்த மீன் திருட்டுத்தனமாக வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை, நண்பர்கள் இதை மற்றவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்..
 
இங்கே நான் மகர் சாதியினன் இல்லை, இவன் என்ன சாதிக்காரனாக இருப்பானோ என்று எவரும் என்னை சந்தேகம் கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் எழவில்லை. 

நான் செல்லக்கூடாத தெரு என்று எதுவும் இல்லை.

காலில் மிதியடி போட்டுக் கொண்டு நடக்கக்கூடாது என்று எவரும் எனக்கு உத்தரவு போடவில்லை.

எவரைக் கண்டும் ஒதுங்கி நிற்க வேண்டிய தேவை இல்லை, என் கைகளை வேகமாக வீசி நடக்கிறேன்.

எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறேன்.

ஒரே அறையில் வசிக்கிறேன்,ஒரே பாத்திரத்தில் தண்ணீர் அருந்துகிறோம், சக மனிதனை விலங்கினும் கீழாக நடத்தும் அவலமில்லை,பரிபூரண சுதந்திரத்தை உணர்கிறேன்.

என் தாய் மண்ணில் இல்லாத சுதந்திரத்தை அனுபவிக்கிறேன்,அந்த ஏக்கம் மட்டும் என் மனதை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

-1913 ல் நியூயார்க் மண்ணில் கால் பதித்த பிறகு அண்ணல் அம்பேத்கரின் அனுபவங்கள்.
செய்யும் தொழிலே தெய்வம் என்று அந்தக்காலத்தில் சொல்லி வைத்தது எதற்காக?

அந்தக்காலத்தில் உனக்கு ஒதுக்கப்பட்ட தொழிலின் மீது உனக்கு வெறுப்பு ஏற்பட்டு நீ விழிப்புணர்வு பெற்று வேறு தொழிலுக்கு மாறி விடக்கூடாது என்பதற்காகவே.
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எதிராக போராடும் இஸ்லாமிய அமைப்புகளில் எத்தனை அமைப்புகள் மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி தாவுத் இப்ராஹிம் வகையறாக்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடமோ,அரபு எமிரேட்டுகளிடமோ கோரிக்கை வைத்திருப்பார்கள்?
ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கடவுளுக்கு சேவை செய்யும் உரிமையை பிறப்பினால் பெற்றவர்கள் என்று அந்த நிலையை தக்க வைத்துக் கொண்டு அதே வேளையில்,

நாமெல்லாம் ஒன்று,ஒரே மக்கள்,ஒரே ரத்தம் என்றெல்லாம் கூறி பிரச்சாரம் செய்வது எந்த வகையில் நியாயமாகும்?

பப்பாளி

கல்லீரல்,மண்ணீரல்,கணையம் ஆகியவை பலம் பெற வேண்டுமா?

பசி தூண்டப்பட்டு,ஜீரண சக்தியும் அதிகரிக்க வேண்டுமா?

பொதுவான உடல்வலிகளில் இருந்து விடுபட வேண்டுமா?

கருப்பையில் இருக்கும் அழுக்குகள், கிருமிகள்,சிறுகட்டிகள்,சதை வளர்ச்சி நீங்க வேண்டுமா?

ஊளைச்சதை குறைந்து உடல் மெலிய வேண்டுமா?தொப்பை காணாமல் போக வேண்டுமா?

கண் பார்வை தெளிவு பெற வேண்டுமா?

புற்று நோய் அபாயம் நீங்க வேண்டுமா?

ரொம்ப சிம்பிள், தினம் நூறு கிராம் அளவுக்கு பப்பாளிப்பழத் துண்டுகள் சாப்பிட்டு வாங்க,போதும். மேலே கூறிய பிரச்சினைகள் குறித்த கவலை வேண்டாம்.

முஸ்தஃபா கமால் பாஷா



இது மட்டும் காலையில் 5 லிட்டர், மாலையில் 3 லிட்டர் பால் தருவதாக இருந்தால் புனிதமானதுன்னு சொல்லி வீட்டில் கட்டிப்போட்டு பால் கறந்திருப்பாங்க.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது.
- நடிகர் சீமான்.

அய்யா நீங்க அதிமுக ஆட்சியில் அம்மா முதல்வரா இருக்கின்ற தருணத்தில் கண்டிப்பா தேர்தல் போட்டி மட்டுமல்ல ஆட்டுக்கறி போட்டிக்கூட விரும்ப மாட்டீங்கன்னு எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே?

ஆரஞ்சுப்பழம்

நீண்ட நாள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா?

உடல் சோர்வாக,பலஹீனமாக உணர்கிறீர்களா?

இதய நோய்,புற்று நோய்,இருமல்,அஜீரணம் ஆகியவை உங்களிடம் இருந்து எட்டி நிற்க வேண்டுமா? ஏற்கனவே வந்தாலும் விலகி ஓட வேண்டுமா?

நன்றாக பசி எடுக்க வேண்டுமா?

நுரையீரல் போன்ற சுவாச உறுப்புகள் சுத்தமடைய வேண்டுமா?

எலும்பு மெலிவைத்தடுக்கும் கால்சியம் உங்கள் உடம்புக்குத் தேவையா?

காட்ராக்ட் பிரச்சினை வராமல் கண்களை பாதுகாக்கும் பீட்டா கரோட்டின் தினந்தோறும் நம் உடலுக்கு சேர வேண்டுமா?

வைட்டமின் சி, டி,ஏ பொட்டாசியம்,சோடியம்,மக்னீசியம்,செம்பு,சல்ஃபர்,குளோரின் போன்றவை உடலுக்கு சீராக சேர வேண்டுமா?

வளரும் குழந்தைகளுக்குத் தேவையான கால்சியம் இயற்கையாக கிடைக்க வேண்டுமா?

உடலில் சேரும்,சேர்ந்த தேவையற்ற கொழுப்புகளை வளர்சிதை மாற்றத்தின் மூலம் விரைவாக வெளியேற்ற வேண்டுமா?

இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு புத்துணர்வுடன் இருக்க வேண்டுமா?

ஆண்மை எப்போதும் அளப்பரிய இருக்க வேண்டுமா?

ஒரே விடை : ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்க,அது போதும்.எல்லா வயதினருக்கும் ஏற்ற பழம் இது.

உகாண்டாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி இடி-அமீனிடம் யாரோ ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டால் ஆண்மைக்கு நல்லது என்று சொல்லி விட்டிருக்கிறார்கள். மூட்டை மூட்டையாக உரித்து கட்டுவானாம்.

ஆரஞ்சு,எலுமிச்சை போன்ற பழங்களின் தோல்களில் சால்வெஸ்ட்ரோல் கியூ எனும் ஒரு வகைப்பொருள் இருக்கிறது.இது உடலின் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. இந்த பொருள்தான் சிட்ரஸ் பழங்களுக்கு நறுமணத்தைக் கொடுக்கின்றது.

இந்தப்பழத்தின் தோல்களை காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.அந்தப்பொடியை தேநீர் போன்று கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு,புற்று நோய் போன்றவை வராமல் தடுக்கப்படும், வந்திருந்தாலும் கட்டுப்படுத்தப்படும்.

குறிப்பாக புகை பிடிப்பவர்கள்,தினந்தோறும் மது அருந்துபவர்கள் தினமும் இரண்டு ஆரஞ்சுப்பழங்களையும், அதன் தோலின் பொடி கொண்டு செய்யப்பட்ட சூப்பையும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

தயவு செய்து இனி ஆரஞ்சுப்பழத் தோலுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையாக இருக்கின்ற உச்ச நீதிமன்ற வழக்கு குறித்து சில நாட்களாக பத்திரிக்கைகள்,சமூக இணைய தளங்களில் செய்திகள் வருகின்ற நிலையில் இது குறித்து அன்றே அண்ணல் அம்பேத்கர் கூறிய கருத்து இதோ...

இந்துக்களிடையே அர்ச்சகர்கள் ஒழிக்கப்படுவது நலம்.ஆனால் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.எனவே , அர்ச்சகத் தொழில் பரம்பரைத் தொழிலாக இருப்பதையாவது ஒழிக்க வேண்டும்.

இந்து மதத்தவன் என்று தன்னை சொல்கிற எந்த சாதியைச் சார்ந்தவராயினும்-அவருக்கு அர்ச்சகர் ஆகும் உரிமை இருக்க வேண்டும்.அர்ச்சகர் தொழிலுக்கான அரசுத் தேர்வு எழுதி சான்றிதழ் பெறாத எவரும் அர்ச்சகர் தொழில் செய்யக்கூடாது என்று சட்டமியற்ற வேண்டும்.

- அம்பேத்கர்
இவர்கள் தேசபக்த இயக்கத்தின் வருங்காலமாம்.

இந்த பிஞ்சுகளின் மனதிலே நஞ்சினை விதைக்கும் இந்த இயக்கம் தர்மபுரி கலவரத்தில் இதுவரைக்கும் களமிறங்கி இருக்கிறதா?

வாச்சாத்தியிலே சென்று வக்கற்றவர்களுக்காக வக்காலத்து வாங்கியிருக்கிறதா?

அத்தியூர் விஜயாவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறதா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையாக இருக்கும் வழக்கில் தானாக சென்று ஆஜராகி இருக்கிறதா?

இந்த இயக்கத்தால் எத்தனை கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது?

நாமெல்லாம் இந்து என்று முழங்கும் இவர்களிடம் சாதி மறுத்து காதல் செய்யும் காதலர்கள் தஞ்சமடைந்தால் சேர்த்து வைப்பார்களா?

ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே சட்டம் என முழங்கும் இவர்கள் காவிரி டெல்டா விவசாயிகளுக்காக கர்நாடகம் நோக்கி பேரணி செல்வார்களா?

விஸ்வரூபம்

விஸ்வரூபம் - இது ஒரு கலைஞனின் கருத்து சுதந்திரத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாக மட்டும் பார்ப்போம்.அந்த அளவிலே மட்டும் கமலுக்கு ஆதரவு தெரிவிப்போம்.

அதற்கு மேல் சென்று கமல்ஹாசன் ஒரு அரசியல்வாதியாக உருவெடுப்பாரேயானால் ஏதோ ஒரு சதி திட்டமிட்டு தமிழன் மேல் திணிக்கப்படுகிறது என்றே அர்த்தம்.

Tuesday 8 January 2013

அன்றைக்கே எங்கள் முன்னோர்கள் சந்திரன்,சூரியன்,புதன்,வியாழன்,சனி இவற்றைப்பற்றியெல்லால் சொன்னாங்கன்னு சொல்பவர்களே!

சரி, கண்ணுக்கு தெரிந்த விஷயத்தைப்பற்றியெல்லாம் சொன்னாங்க,கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா,வைரஸ் குறித்தெல்லாம் ஏதாச்சும் சொல்லி வெச்சுட்டு போனாங்களான்னு கொஞ்சம் எடுத்து விடுங்களேன்.
ஒரு பெண்ணுக்கு ஆண் பிள்ளை பொறந்தா கொண்டாடுறாங்க,ஆனால் வீட்டில் பசு சேங்கன்று (காளை) ஈன்றால் வருத்தப்படறாங்களே,ஏன்? சுயநலம்,எதிலும் ஆதாயம் பார்க்கும் குணம்தானே?
வருடத்தில் 11 மாதங்கள் முழுவதும் போக்கிரித்தனம், நொள்ளமாரித்தனம் செய்து கொண்டு, 12 வது மாதம் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுக்கொண்டு அந்த தருணத்தில்கூட, மாலை போட்டுக்கொண்டிருப்பதால் கம்முனுகிறேன் இல்லன்னா அவ்வளவுதான் என்று மிரட்டிக்கொண்டு, கோயிலுக்கு போய் வந்தவுடன் அவசர அவசரமாக மாலையை கழற்றி விட்டு குடித்து விட்டு தெருவில் அலம்பல் விடும் நாய்களை ரோட்டில் ஓட விட்டு அடிக்கனும் போல் இருக்கிறது.

பெண்ணே நீ போற்றத்தகுந்தவள் , நீ தெய்வத்துக்கு சமமானவள் என்று உன்னை மற்றவர்களால் நீ பொய்யுரைகளால் புகழப்பட்டுக்கொண்டிருந்தவரை உனக்கு கிடைத்த வெகுமதிகள்தான் என்ன?

ஆணாதிக்கவாதிகளால் அடக்கி வைக்கப்பட்டாய்.

பால்யவிவாகம் எனும் அடக்குமுறை உன் மீது நிகழ்ந்தது.

இளம் விதவை எனும் பட்டம் கிடைத்து பூவை இழந்தாய்,பொட்டை இழந்தாய், வெள்ளைப்புடவையே உன் சீருடை ஆனது.

குடிகாரக்கணவன் இறந்தபோதும் உடன்கட்டை ஏறுதல் எனும் சதியில் நீ சதிமாதாவாக பலியிடப்பட்டாய்.ஆனால் நீ இறந்தால் உன் கணவனுக்கு மறுமணம்.

தேவர்களுக்கு தாசியென தேவதாசியாகி சீரழிக்கப்பட்டாய்.

குடும்பத்தின் எல்லாத்துயரங்களுக்கும் உன் மீதே பழி சுமத்தப்பட்டது.

நீ விழித்துவிடாத வகையில் தெய்வத்திற்கு ஒப்பானவள் என ஒரு பட்டம்.

பெண்ணே இவையெல்லாம் பொய்யுரைகள்,உன்னை மயக்கும் வார்த்தைகள்,உன்னை அடிமைப்படுத்தும் தந்திரங்கள். பொறுத்தது போதும் பொங்கி எழு.

கல்வி பயிலாத பெண்ணொருவள் களர் நிலம் போன்றவள், எனவே கல்வி கற்க வா என சான்றோர்கள் அறிவுத்தியதால் நீ கல்வி கற்கத்துவங்கிய பின்புதானே உனக்கு சமூகத்தில் உண்மையான விடுதலை கிடைத்தது.

மூடர்கள் மதத்தின் பெயரால் ஆயிரம் சொல்லுவார்கள், இவைகளை காலில் போட்டு மிதித்து மாதர்தமை இழிவு செய்யும் மடமைதனை கொளுத்துவோம் என சூளுரைப்பதில்தான் பூரணமான பெண் விடுதலை இருக்கிறது.
 
டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் உண்மையில் மகிழ்ச்சியை தரும்வேளையில் இந்த நாட்டில் தலித்துகள்,பழங்குடியினருக்கு எதிரான இதே போன்ற கொடுமைகளும்,அதற்கு நீதி கேட்டு அவர்கள் செல்லும் நெடும் பயணமும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

அதிலும் கேள்விகேட்க நாதியில்லாத இருளர் பழங்குடியினர் பெண்களுக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த வன்கொடுமைகளுக்கு எதிராக ஆங்காங்கே முணுமுணுப்புகள்தான் இருந்தனவே ஒழிய இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லை என்பது வேதனையான ஒன்று.

எங்கோ தென்தமிழகத்தில் பிற்பட்டவகுப்பில் பிறந்து அரசு கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிய வந்த இடத்தில் இது போன்ற நாதியற்ற மக்களின் துயர் கண்டு திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டு தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வரும் பேராசிரியர்.கல்யாணி என் பார்வையில் மற்றவர்களைவிட ஒருபடி மேலே தெரிகிறார்.

பேராசிரியர் அய்யா அவர்கள் மேற்கொண்ட போராட்டங்களினால் இருளர் இன மக்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்,அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

தேற்றான் கொட்டை

தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும் நீரை தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று வழங்கப்படுகிறது.உடனே தம்பி இராம்குமார் சண்முகம் இராமையா !அமுக்கரான்னா என்ன அமுக்கரா அமுக்கரான்னு சொல்லுமான்னு ஒரு குதர்க்கமாக கேள்வி கேட்டுடாதேள்.

தமிழகத்தில் மலைக்காடுகளில் விளைகிறது.இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டி உணவின் மீது ஆர்வத்தை அதிகரிக்கும். இதன் பழச்சதை சீதபேதியை கட்டுப்படுத்தும்,இந்த பழச்சதையை காயவைத்து பயன்படுத்தலாம்.

இதன் விதையை ஊறவைத்து பசைபோல அரைத்து தடவிவர வீக்கம் குறையும். ( இராமையா கவனிக்க )

இதன் விதைப்பொடியை காலை,மாலை இரு வேளை தண்ணீரில் கலந்து குடித்து வர கெட்டியாகி தொல்லை கொடுக்கும் மார்புச்சளி இளகி வெளியே வர துவங்கும்.

உடல் இளைப்பு நீங்கி வலு பெறும். மோரில் கலந்து சாப்பிடும்போது நாள்பட்ட பேதி நிற்கும்.மேலும் இது வெள்ளைப்படுதல், மதுமேகம், சிறுநீர்க்கடுப்பு,எரிச்சல், மூல நோய் போன்றவற்றையும் தீர்க்கும் ஆற்றல் பெற்றது.

கறிமுள்ளி


நம்மில் பலரும் கறிமுள்ளி எனும் செடியை கண்டங்கத்தரி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஃபேஸ்புக்கிலும் அவ்வாறே பலரும் பதிவுகள் இடுகின்றனர்.உண்மையில் கண்டங்கத்தரி வேறு,கறிமுள்ளி வேறு. முதல் படம் கறிமுள்ளி, இரண்டாவது படமே கண்டங்கத்தரி.

கறிமுள்ளி : இது தானகவே வளர்கிறது. முள் நிறைந்த இலைகள், நீலநிறப் பூக்கள்,வெள்ளை நிறத்தில் வரிகளுடன் மஞ்சள் நிறத்தில் பழங்கள் கொண்டது.

இந்த தாவரம் முழுவதும் மருத்துவப்பயன்கள் நிறைந்தது.சதை நரம்புகளை சுருங்கச்செய்தல்,காமம் அதிகரித்தல் ஆகிய குணங்கள் பெற்றது. வேர் கோழையகற்றி,சிறுநீர்,வியர்வை ஆகியவற்றை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

முழுத்தாவரத்தையும் உலர்த்தி சூரணம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட இருமல், இறைப்பு,ஈளை,கோழை ஆகிய பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

இதன் சமூலத்தை குடி நீரில் காய்ச்சி குடித்து வர சுரம்,இருமல் ஆகியவை ஓடிப்போகும்.

பல்வலி,பல் சொத்தை,போன்றவற்றிற்கு கிராமப்புறங்களில் இதன் விதையை பீடிபோல் சுருட்டி புகை பிடித்து வரும் வழக்கம் உண்டு.

உலக அழிவு


உலகத்தின் அழிவை என்னால் யூகிக்க முடிகிறது.

இரவில் வானில் தெரியும் நட்சத்திரங்கள் போல பகலில் வானத்தில் உயர உயர பறந்து திரிந்த பருந்துகளைக் காணோம்.

சிட்டுக்குருவிகள் மாயமாகிப்போயின.

கருடன் எனப்படும் அழகான செம்பருந்துகள் தேடினாலும் கிடைக்கவில்லை.

நீர் நிலைகள் எல்லாம் அசுத்தமாகிக் கொண்டிருகின்றன.

ஊரெங்கும் கொசுத்தொல்லை,காரணம் பூச்சிக்கொல்லிகளால் தவளைகள் அழிந்தன.கொசுக்களின் லார்வா புழுக்களைத்தின்னும் தலைப்பிரட்டை இல்லாததால் கொசுக்களுக்கு கொண்டாட்டம்.

இப்படி மனிதனின் தவறுகளால் ஒவ்வொரு உயிரினமாக காணாமல் போய் பூமி பொட்டல்காடாய் மாறும் என்பதே என் கணிப்பு.

விண்கல் மோதுவதாலோ,சுனாமி நிலத்தை விழுங்குவதாலோ,எரிமலைகளின் சீற்றத்தினாலோ அழிந்து போகும் என்றில்லை.பூமின் ஜீவராசிகளை அழிக்க மனித தவறுகளே போதும்.
 

வெண்புள்ளி

என் அருமை நண்பர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள், சமூக நலனில் அக்கறை கொண்ட, மனித நேயம் மிகுந்த என் நண்பர்கள் இந்த பதிவினை பகிர்ந்து பலருக்கும் இந்த செய்தியை கொண்டு செல்ல உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உடலில் வெண்புள்ளி எனப்படும் நிறக்குறைபாட்டினை சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெண்குஷ்டம் என அழைத்து வந்தனர்.ஆனால் அதற்கும் குஷ்டம் எனும் நோய்க்கும் சிறிதளவும் தொடர்பில்லை,அரசாங்கம் இந்த குறைபாட்டினை வெண்புள்ளி என அழைக்க ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த குறைபாடு பெரும்பாலும் இளம்பருவத்தினருக்கே வருகிறது.இது தொற்று நோயோ, பரம்பரை நோயோ அல்ல,இது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே.

இந்த நிறக்குறைபாடு குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள் பெரும் துயரங்களை அடைகின்றனர். இவர்கள் படித்து எவ்வளவு நல்ல நிலைக்கு உயர்ந்தாலும் திருமணம் என்று வரும்போது பல இடர்ப்பாடுகளை சந்திக்கின்றனர். இவர்கள் மற்றவர்களைப்போன்றே முழு உடல் ஆரோக்கியம் உடையவர்கள் எனும் தெளிவு நம் மக்களிடையே போதுமானதாக இல்லை என்பதே காரணம்.

திருமண விஷயத்தில் இவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைக் களைய வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தினரால் ஒரு சுயம்வரம் நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் 27-ம் நாள் திருச்சி நேஷனல் கல்லூரில் நடைபெற இருக்கிறது.

நமக்கு தெரிந்தவர்களுக்கு,அறிந்தவர்களுக்கு, நண்பர்களுக்கு,உறவினர்களுக்கு இந்த குறைபாடு இருக்கலாம்,அவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்வோமே.

இது குறித்த மேலும் விபரங்களுக்கு,

வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கம்-இந்தியா,

எண்.6 காமாட்சிராவ் தெரு,பட்டேல் நகர்.

மேற்கு தாம்பரம்,சென்னை-600045.

தொலைபேசி : 044- 22265507, 65381157.

மின் அஞ்சல் : leucodermafree@yahoo.in

website. www.lam-india.org.

குறிப்பு : இந்த குறைபாடு உடையவர்களுக்கு மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (defence research and development organisation DRDO) மருந்தினை கண்டுபிடித்துள்ளது.இந்த மருந்தினை 300 முதல் 400 நாட்கள் சாப்பிட்டு வர பழைய இயல்பு நிறம் திரும்ப வருவதாக பயன்படுத்திவர்கள் கூறுகிறார்கள்,இது குறித்து விபரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியிலும் ஃபோனிலும் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் கோல் ஊன்றி நடப்பவர் கூட கோலை வீசி விட்டு கம்பீரமாக நடப்பார்கள் என சித்த மருத்துவம் சிறப்பித்துக் கூறுகிறது.

இஞ்சி : தோல் நச்சுத்தன்மை உடையது என்பதால் தோல் நீக்கிய இஞ்சியை சாறெடுத்து தெளிந்தவுடன் காலையில் அருந்தலாம், அல்லது தேனில் ஊறவைத்து விற்கப்படும் இஞ்சித்துண்டுகளையும் சாப்பிடலாம்.இது ஒரு சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட்.பசியை தூண்டும்,குமட்டல்,வாந்தியை நீக்கும்,வயிற்றுவலி,ஜீரணக்கோளாறுகளை சரி செய்யக்கூடியது.

சுக்கு : சுண்ணாம்பு சத்து மிகுந்தது, இதயத்திற்கும்,இரத்தக்குழாய்களுக்கும் வலு கொடுக்கக்கூடியது.வயிற்றுப்புண்களை தடுக்கும்,ஏற்கனவே இருந்தாலும் குணமாக்கிவிடும் ஆற்றல் உண்டு.வயிற்றில் எஞ்சி இருக்கும் பித்த நீரை சமன் செய்யும் ஆற்றல் உண்டு.இதை நண்பகல் வெந்நீருடன் சாப்பிடலாம்.

கடுக்காய் : கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் எனக்கூறுவார்கள்.

கடுக்காய்க்கு தாயினும் அதிகம் குணம் இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது.

இரத்தத்தை சுத்தம் செய்யும்,கழிவுகளை நீக்கும்,செல்களுக்கு புத்துணர்வு கொடுக்கும், நினைவாற்றல் அதிகரிக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அரு மருந்து. கண் நோய்களுக்கு விடை கொடுக்கும். தீராத மலச்சிக்கலையும் குணப்படுத்தும்.

கடுக்காயை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் வயோதிகத்திலும் வாலிபர்களாக காட்சி அளிப்பார்கள், நரை அவர்களை அண்டாது.சுருக்கமாக சொன்னால் உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது.

பழங்காலத்தில் கடுக்காய் நீர் கொண்டு கட்டிய கட்டிடங்கள்,கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளைக்கடந்தும் நிலைத்து நிற்பதை காணலாம்.

இவ்வளவு அருமையான குணங்கள் கொண்ட ஒரு உடல் பாதுகாப்பு வழிமுறையை நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள்,இதை கடைபிடிக்க ஒரு மாதத்துக்கு மிஞ்சி போனால் நூறு ரூபாய் பிடிக்குமா?

கேஎஃப்சி சிக்கன்,மெக்டொனால்ட்ஸ் பர்கர் இன்னும் பிற துரித உணவுகளால் நம் உடலில் சேரும் நஞ்சையும்,கழிவுகளையும் இது போன்ற எளிய வழிமுறைகள் நம் உடலில் இருந்து விரட்டி நமக்கு பெரும் துன்பங்கள் வராமல் பாதுகாத்திடும் என்பது என் கருத்து. கடைபிடிக்க முயல்வோமா?
நம் பக்கத்து வீட்டில் ஒருவர் இருக்கிறார்,அவர் ஒரு சாமான்யர் என்று நினைத்து பட்டும் படாமல் இருக்கிறோம், ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி,அதில் நம் பக்கத்து வீட்டுக்காரர் பேசுகிறார், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நம் பக்கத்து வீட்டுமனிதரின் அருமை,பெருமைகளை பட்டியலிடுகிறார்.

பிரமித்துப்போகிறோம், அடடே இவ்வளவு பெரிய மனிதர் பக்கத்து வீட்டில் இருந்தும் அவரைப்பற்றி தெரியவில்லையே,பழகாமல் விட்டு விட்டோமே என்று.

அந்த பட்டும் படாமல் பழகிய பக்கத்து வீட்டு மனிதர் போலத்தான் நாம் ரசத்தில் இருந்து தூக்கி எறியும் கொத்தமல்லி,அதன் பெருமைகளை பார்ப்போமா?

இலை,விதை இரண்டும் மருத்துவ குணம் நிறைந்தவை.தினந்தோறும் கொத்தமல்லித்தழையை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் இரத்தம் சுத்தமடையும்,இரத்தக்குழாய்களில் படிந்துள்ள நச்சுக்கழிவுகள் காணாமல் போகும்.முக்கியமாக மதுவுக்கு அடிமையானவர்கள் மதுவின் மோகத்திலிருந்து விடுபடுவர்.

மேலும் தலைசுற்றல், நெஞ்செரிச்சல்,சுவையின்மை,பசியின்மை,உடல்களைப்பு நீங்கிடும்,ஆழ்ந்த தூக்கம் வரும்,மன அமைதி கிடைக்கும்,எப்போதும் ஒரு வித பதற்ற நிலை,அச்சவுணர்வுடன் இருப்பவர்கள் தெளிவு பெறுவார்கள். சிறுநீரை பெருக்கும்,வாய்வு கோளாறுகளை நீக்கும்.

கொத்தமல்லி விதையுடன் சீரகம்,அதிமதுரம்,கிராம்பு,சதகுப்பை,லவங்கம்,கருஞ்சீரகம் பனங்கற்கண்டு ஆகியவற்றை கலந்து பொடி செய்து காலை,மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர காய்ச்சல்,ஜன்னி, மார்பு வலி, வாந்தி,தொடர் விக்கல்,வாழ்குழறல்,வலிப்பு ஆகியவை பறந்து போகும்.

உடல்வலி, களைப்பு ஆகியவை பறந்து போய் நல்ல உறக்கம் வரும்,மனதிற்கு தெளிவு கிடைக்கும்.

கொத்தமல்லியை தினந்தோறும் கணிசமான அளவு எடுத்துக்கொண்டால் கண்கள் குளிர்ச்சி பெறும்,பார்வைத்திறன் கூடும்,தலை வலி, தலை பாரம் ஆகியன தீரும்.

அஞ்சு ரூபாய் மேட்டர்,எவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கு பாருங்க, கொத்தமல்லியை இனி நாள்தோறும் பயன்படுத்த ஆரம்பித்து உடல் மற்றும் உள்ளத்தின் நலன் காப்போமா?.
இந்த உலகையும் மனிதர்களையும் படைத்தது கடவுள் என்பது உண்மையானால் கூடவே கொசுத்தொல்லை,டெங்கு,மலேரியா,சிக்குன் குனியா, நீரிழிவு நோய், பிபி, அல்சர்,கேன்சர் இது போன்ற தொல்லைகளையும் கொடுத்த அவன் கண்டிப்பாக சைக்கோ அல்லது சாடிஸ்ட்டாக இருக்க வேண்டும்.
மறு பிறப்பு குறித்து நம்பிக்கை இல்லாவிடினும் இப்போ ஒரு ஆசை வந்திருக்கு, ஏதாவது பிச்சைக்கார நாடாக இருந்தாலும் பரவாயில்ல, சாதிகள் இல்லாத,ஆண்ட பரம்பரை அகம்பாவம் இல்லாத ஒரு நாட்டில் பிறக்கனும் இந்த ஜென்மத்து நினைவுகளோடு.
மார்பு முடி தெரிய சட்டை பட்டன்களை திறந்து விட்டுக்கொண்டு அரைசான் அளவு கால்சட்டை அணிந்து கொண்டு இது ஆண்மையின் அடையாளம் என்று சிலர் திரிந்திடும்போது.

பெண்மைக்கு அழகு சேர்க்க என்று அவர்கள் விருப்பப்படி உடையணிவதில் என்ன தவறு?
விசாரணைக்கு வா என்று புதுச்சேரி போலிசாரால் அழைத்து செல்லப்பட்டு வழியில் ஜீப்பை நிறுத்தி ஒரு புதர் மறைவிலே சீரழிக்கப்பட்டாளே ஒரு இருளர் இனப்பெண். அந்த அப்பாவிப்பெண் என்ன ஆபாசமாகவா உடை அணிந்திருந்தாள்? சிறைக்காவலர்களால் சின்னாபின்னாமாக்கப்பட்டாளே ரீட்டா மேரி. அவளும் ஆபாசமாகவா உடை அணிந்திருந்தாள்? 

போங்கையா நீங்களும், உங்க நியாயமும். ஆபாசத்தை பத்தி பேச வந்திட்டீங்க.
மதங்களின் பெயரால் இந்த உலகம் முழுவதும் மனித குலத்துக்கு காலம்காலமாக நடந்து வரும் கொடுமைகளையும்,அவலங்களையும் தெளிவாக உணர்ந்ததாலேயே நாத்திகர்கர்களாகிய நாங்கள் கடவுள் மறுப்பை பேசி வருகிறோம்,மூட நம்பிக்கைகளை எதிர்த்து வருகிறோம்.

அவ்வாறு நாங்கள் பேசிடும் போது ஒரு சிலர் ஓடி வந்து எங்கள் மதத்துக்கு வாருங்கள்,அங்கே மூட நம்பிக்கைகள் இல்லை,ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று மதப்பிரச்சாரம் செய்திடுவது வேடிக்கையாக இருக்கிறது.

அவர்களின் இந்த செயலை பார்க்கும் போது சாலையில் பேருந்து ,டோல்கேட் போன்ற இடங்களில் வேகம் குறைத்திடும் போது பனங்கிழங்கு, அவிச்ச வேர்க்கடலை,வாட்டர் பாக்கெட் என்று ஒரு கும்பல் ஓடி வந்து விற்பனை செய்யுமே,அது போல் இருக்கிறது.
எல்லோரும் டெல்லிப்பெண்ணைப்பற்றியே பேசுகிறீர்களே,இங்கே புனிதாவுக்கு நடந்த கொடுமையையோ, ஈழத்தில் நம் தமிழ் சகோதரிகளுக்கு நடந்த கொடுமைகள் குறித்தெல்லாம் பேசினீர்களா என்றெல்லாம் பலரும் கேள்வி கேட்கிறார்கள்.

உண்மைதான்,ஆனால் காரணம் என்ன? ஈழத்தில் கொடுமைகள் நடைபெற்ற போது இங்கே இருந்த பத்திரிக்கைகள் தங்களுக்குள் கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு இருட்டடிப்பு செய்தன,மக்களுக்கு செய்தியை கொண்டு செல்லாமல் பார்த்துக் கொண்டன.
அதே பத்திரிக்கைகள்தான் இப்போது டெல்லிப்பெண் விஷயத்திலும் மக்களிடையே உரிய முறையில் செய்தியை கொண்டு சென்று உணர்வுகளை எழுப்பினர்.

எது எப்படியோ டெல்லிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விஷயத்தில் ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் என்னிடம் சொன்னாள், கடையில் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வரும்போது அவளை நோக்கி நாலைந்து இளைஞர்கள் கேலி செய்திருக்கிறார்கள். முடியைப் பார், நடையைப் பார்,எங்களுக்கு பஜ்ஜி என்றெல்லாம்.

இது என் கவனத்துக்கு வந்த உடன் நான் அந்த பெண்ணிடம் சொன்னேன்.முதலில் தைரியத்தை வளர்த்துக் கொள்,அங்கேயே சத்தமாக எல்லோரும் பார்க்கும்படியாக எதிர்த்து பேசு,. சும்மா ஒரு ஸ்டண்ட்டு அடி இதோ ஒரு ரூபா காய்ன் ஃபோனில் டிஎஸ்பி ஆஃபிசுக்கு ஃபோன் பண்ணி சொல்றேன் என்று.சரி என்று சொன்னாள்.

ஓரிரு நாட்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் ஓடி வந்து கெஞ்சினார்களாம் அந்த இளைஞர்கள்.இனிமேல் கேலி செய்ய மாட்டோம் என்று. அங்கிருப்பவர்களும் கவனம் திரும்பி அவர்களை திட்டி அனுப்பி இருக்கிறார்கள்.

நம்முடைய பெண்களில் பெரும்பாலானோர்க்கு தைரியம் குறைவாக இருக்கிறது, சூழ்நிலைகளைகளை எப்படி சாதுர்யமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற பயிற்சி இல்லாமல் இருக்கிறார்கள்.

காரணம் பெண் என்றால் மண்ணைப் பார்த்து நடக்க வேண்டியவள் போன்று அவளுக்கு நம் சமூகம் காலம் காலமாக பயிற்றுவித்திருக்கும் கட்டுப்பாடுகளே.

அதற்கு கொதித்தாயா,இதற்கு கொதித்தாயா என கேட்பதால் சொல்லுகிறேன், எங்களுக்கு அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு அன்பான,கனிவான பணிவான வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன்.

எம் தலைவன்,என் கட்சி, என் கட்சி தொலைக்காட்சி என்று ஒரே சிந்தனையில் மூழ்கிக்கிடக்காமல்தினந்தோறும் மூன்றுக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை படித்திடுங்கள், முடிந்த அளவுக்கு எத்தனை தினசரி, வார இதழ்கள், பருவ இதழ்கள் படிக்க முடியுமோ படியுங்கள், பல்வேறு தொலைக்காட்சி செய்திகளை பார்த்திடுங்கள், அப்போது தானாகவே ஒரு செய்தியின் உண்மைதன்மை புரியும்,புரிந்து கொள்ளும் பக்குவமும் திறனும் நமக்கு வந்து விடும்.முக்கியமாக ஆட்டு மந்தை புத்தி நம்மை விட்டு அகலும்.

இத்தகு திறன் கொண்ட மக்கள் சமூகத்தில் பெருகிடுவார்களேயானால் எந்தத்தலைவனுக்கும் தன் மக்களை ஏமாற்றும் எண்ணம் துளியும் வராது.தலைவனுக்கு மட்டுமல்ல,ஆள்பவர்கள்,பத்திரிக்கைகள் என அனைவருக்குமே மக்கள் மீது ஒரு அச்சம் இருந்து கொண்டே இருக்கும், எவரும் மக்களை ஏமாற்ற துணிய மாட்டார்கள்.துணிபவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.

அப்படி ஒரு அறிவார்ந்த சமூகமாக நம் சமூகம் மாறி விட்டால் இதற்கு கொதித்தாயா,அதற்கு கொதித்தாயா என்ற கேள்விக்கே இடம் இருக்காது.கொதிக்கத்தூண்டும் சம்பவங்களும் நடக்காது.